தூத்துக்குடியில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த கிணற்றைக் காணவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த அமமுக 41-ஆவது வார்டுச் செயலர் ஆர். காசிலிங்கம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த மனு:
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு டூவிபுரம் 2-ஆவது தெரு பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக அரசாங்கத்தால் கிணறு அமைக்கப்பட்டது. தற்போது அந்த கிணறு அங்கு இல்லை. அந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது. தனி நபர் ஒருவர், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கிணற்றை அழித்து, அந்த இடத்தில் பிள்ளையார் கோயில் கட்டியுள்ளார். பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்து தனது சொந்த இடம்போல அந்த நபர் அனுபவித்து வருகிறார். அந்த இடத்துக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சிலர் மிரட்டி வருகின்றனர்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கிணற்றை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.