தமிழ்நாடு

வாக்களிக்காதவர்களின் பிரச்சினை பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என்று மெத்தனமா?: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் 

DIN

சென்னை: அதிமுகவிற்கு வாக்களிக்காத மக்களின் பிரச்சினை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று மெத்தனமா? என்று குடிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் “ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்” என்று குடிநீருக்காக மக்கள் தினமும் திண்டாடும் அவலநிலை அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கு நீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை உரிய காலத்தில் தூரெடுத்து ஆழப்படுத்தாமலும், மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கத் தேவையான விரிவான  நடவடிக்கை எடுக்காததாலும் அந்த ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.

பருவமழை தவறியவுடன் குடிநீர் ஆதாரங்களை அதிகரிக்கவும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை முறைப்படி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு மோசமாகத் தவறி விட்டது. கிருஷ்ணா நதி நீரைப் பெறவும் அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் தமிழகத்திற்குக்  கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் முயற்சிக்கவில்லை. கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதிலோ,  நெம்மேலி கடல்நீர் குடிநீர் திட்டத்திலிருந்து 100 எம்.எல்.டி. நீர் கிடைக்கிறது என்று சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிப்பதிலோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை.

கடலோர மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை,போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றியிருந்தால் கூட இவ்வளவு மோசமான தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்திருக்க முடியும். எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் ஊழல் ராஜ்யத்தை நடத்துவதில் மட்டுமே அதிமுக அரசு அதிகமான கவனம் செலுத்தியதால் அவல நிலைக்கு தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 

குடிநீர் பஞ்சத்தின் கொடுமையில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து முதலமைச்சரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ அதுபற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல்- குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை கூட எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்காத மக்களின் பிரச்சினை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று மெத்தனமாக இருக்கிறார்களா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

இந்நிலையில் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றிட முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே கழக  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே குடிநீர் இன்றி அவதிப்படும் தாய்மார்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு தங்களால் இயன்றவரை டேங்கர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கிட முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT