மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் கோவை மாநகரில் உள்ள 22 சிக்னல்களுக்கான மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது.
கோவை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதத்தில் காவல் துறை சார்பில் 62 சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல்களில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகளுக்கு ஆகும் கட்டணத்தை மின் வாரியத்துக்கு கோவை மாநகராட்சி செலுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் கடந்த மாதம் முழுமையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருச்சி சாலையில் 22 இடங்களில் உள்ள சிக்னல்களின் மின் இணைப்புகளை மின்வாரியம் துண்டித்துள்ளது.
இந்த தானியிங்கி சிக்னல்கள் கடந்த சில நாள்களாகச் செயல்படாமல் உள்ளன. தற்போது இங்கு போலீஸாரை பணி அமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நிலைக்கு மாநகர காவல் துறை தள்ளப்பட்டுள்ளது. இதனால் போலீஸாரும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிக்னல்களில் விளம்பரப் பதாகைகளை நிறுவி அதன்மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டு அந்தந்த சிக்னல்களுக்கு உரிய மின்கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் செலுத்தி வந்தது.
இந்நிலையில் விளம்பர பதாகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டதால் மாநகராட்சிக்கு வரும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கட்டணத்தை முறையாகச் செலுத்த முடியவில்லை. இப்பிரச்னை தொடர்பாக மாநகராட்சி நிர்வாகமும், மின்வாரியமும் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் தீர்வு எட்டப்படும். அதுவரையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள சிக்னல்களில் போக்குவரத்து காவலர்கள் முழு நேரமும் பணியில் அமர்த்தப்படுவர் என்றார்.