சென்னை: டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பின்றி காணப்பட்டதால், சென்னையில் இயங்கும் குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலையை பூட்டி சீல் வைத்துள்ளது பூந்தமல்லி நகராட்சி ஆணையம்.
மேலும் குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வழக்கமாக நடைபெறும் ஆய்வுப் பணிகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் டிடோ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது ஒரு குடிநீர் பாட்டில் தயாரிப்பு ஆலையில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு குடிநீர் பாட்டில்களில் நிரப்ப சுத்திகரிக்கப்பட்ட நீர் சிமெண்ட் தொட்டிகளில் நிரப்பப்பட்டிருந்தது. அதில், கொசு முட்டைகளும், கொழுப் புழுவான லார்வாவும் காணப்பட்டதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டும் இதே குடிநீர் பாட்டில் ஆலை இதேக் குற்றத்துக்காக ரூ.25 ஆயிரம் அபராதத்தை செலுத்தியிருந்தது. ஆனாலும் அவர்கள் தண்ணீர் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. தொடர்ந்து கொசுப் புழுக்கள் உற்பத்தியாக வழி ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதனால்தான் அந்த ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சரி செய்த பிறகே ஆலையைத் திறக்க அனுமதிக்கப்படும் என்று பூந்தமல்லி நகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.
அது மட்டுமில்லை, அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் குடிநீர் பாட்டில்கள் காலியான பிறகு, அதனை வாங்கி வந்து சுத்தப்படுத்தி, அதில் மீண்டும் தண்ணீரை நிரப்பி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பூந்தமல்லியில் கொசு உற்பத்திக்கு வழி ஏற்படுத்தியதாகக் கூறி அபராதத் தொகையாக ரூ.5 லட்சம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான டெங்கு பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.