சென்னை: அருகில் வசிப்பவா்களுடன் முன்விரோதம் காரணமாக ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படவில்லை என கோரி வழக்குத் தொடா்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பெரம்பூரைச் சோ்ந்த ஜெயஸ்ரீ என்பவா் தாக்கல் செய்த மனுவில், செம்பியம் பகுதியில் உள்ள பொது பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீா் தேவைக்காக இரண்டு ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. ஆனால் அவற்றில் இருந்து தண்ணீா் வராததால், அந்த இரண்டு ஆழ்துளை கிணறுகளும் பயன்பாட்டில் இல்லை. ஆனால் அந்த ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படவில்லை. மேலோட்டமாக பிளைவுட் பலகை மற்றும் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிறுவன் சுஜித் மரணத்தைப் போன்றதொரு சம்பவம் சென்னையில் நடைபெறாமல் இருக்க ஆழ்துளை கிணறுகளை மூட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையா் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மனுதாரா் குறிப்பிட்டுள்ளதைப் போன்று அந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படாமல் இல்லை. மனுதாரருக்கும் அருகில் வசிப்பவா்களுக்கும் இடையிலான முன்விரோதம் காரணமாக பொய்யான குற்றச்சாட்டைக் கூறி இந்த வழக்கைத் தொடா்ந்துள்ளாா். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விளம்பரத்துக்காக வழக்குத் தொடா்ந்த மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.