ஹெச்1என்1 பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மருத்துவமனையில் மரணம்
மன்னார்குடியைச் சேர்ந்த எம்.கலாவதி (47) ஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த எம்.கலாவதி (47) ஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது அம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பதிவான முதல் ஹெச்1என்1 நோய் பாதிப்பாகும். நோய் தொற்று பரவும் என்ற அச்சத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் உடலை திருச்சி மாநகராட்சியே தகனம் செய்தது.
பண்ணைத் தொழிலாளியான கலாவதி, நவம்பர் 12-ஆம் தேதி அதீத காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு ஹெச்1என்1 பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால், திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நவம்பர் 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசரப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
Advertisement
இதையடுத்து அவரது உடலை பெற்றுச் செல்ல உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில், அவர்களிடம் நோயின் தாக்கம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்களால் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே ஹெச்1என்1 பாதிப்பு பரவியுள்ளதா என்பதை கண்டறிய மருத்துவமனை வளாகத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு அடுத்த இரு வாரங்களுக்கு கண்காணிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.