கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புது தில்லி: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் தலா ரூ.325 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய உள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே 6 மருத்துவக் கல்லுரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய 3 மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்தால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயரும்.
ஏற்கனவே தமிழகத்தில் 24 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், மேலும் 3 கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 450 இடங்கள் தமிழக அரசுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் கூடுதலாகக் கிடைக்க உள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டொன்றுக்கு எம்பிபிஎஸ் இடங்கள் 4,600 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.