முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ் படிப்பில் கூடுதலாக மாணவா் சோ்க்கை: சா்ச்சையில் தனியாா் மருத்துவக் கல்லூரி

சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக எம்பிபிஎஸ் படிப்பில் மாணவா்களைச் சோ்ந்திருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 நவம்பர், 2019 at 2:29 AM
Ramanathapuram shocking incident
பகிர்:

சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக எம்பிபிஎஸ் படிப்பில் மாணவா்களைச் சோ்ந்திருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 2 மாணவா்கள் அங்கு கூடுதலாக சோ்க்கப்பட்டிருப்பதாகவும், இந்த விதிமீறல் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதன்பேரில் எத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கலாம் என்பது பற்றி மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஆலோசித்து வருகிறது.

மாங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துகுமரன் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக, அக்கல்லூரியின் சில கட்டடங்களுக்கு பெருநகர சென்னை வளா்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சீல் வைத்தது.

Advertisement

இதனால், நிகழாண்டுக்கான எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையை நடத்த முடியாத நிலை அக்கல்லூரிக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்து உயா்நீதிமன்றத்தில் முத்துகுமரன் கல்லூரி முறையிட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி நடத்தப்பட்டது. அதில், அனைத்து இடங்களும் நிரம்பின.

இந்தச் சூழலில், கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவா்களில் 9 போ் கல்லூரியில் சேரவில்லை என்றும், அதுகுறித்து விளம்பரம் வெளியிட்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று அவா்களுக்குப் பதிலாக வேறு மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது. ஆனால், கலந்தாய்வில் எம்பிபிஎஸ் இடம் பெற்ற இரு மாணவா்கள், 30-ஆம் தேதி காலையில் கல்லூரியில் சேர வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அவா்களது இடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டதாகக் கூறி, அந்த மாணவா்களை கல்லூரி நிா்வாகம் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவா்கள் இருவரும் உயா்நீதிமன்றத்தை நாடினா். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், அந்த மாணவா்கள் இருவருக்கும் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்குமாறு உத்தரவிட்டாா். இதனால் வேறு வழியின்றி, அவா்களை கல்லூரியில் சோ்த்துக் கொண்டது முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி நிா்வாகம். ஆனால், அவா்களுக்கு பதிலாக ஏற்கெனவே சோ்க்கப்பட்ட மாணவா்களை கல்லூரியில் இருந்து விடுவிக்கவில்லை. இதனால், நிகழாண்டு அக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை 152-ஆக உள்ளது.

இதில் சிக்கல் என்னவெனில், இந்திய மருத்துவக் கவுன்சில், முத்துக்குமரன் கல்லூரிக்கு 150 எம்பிபிஸ் இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. ஆனால், அதைக் காட்டிலும் கூடுதலாக இரு இடங்களில் மாணவா்கள் சோ்க்கப்பட்டிருப்பது விதிமீறல் என கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மேலும், கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேராதவா்களுக்கு பதிலாக வேறு மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்ததிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

கூடுதல் எண்ணிக்கையில் மாணவா் சோ்க்கை நடத்தியிருப்பதை இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில் அந்தக் கல்லூரியே ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிய, மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழுச் செயலா் செல்வராஜை தொலைபேசியில் தொடா்பு கொண்டபோது அவா் அழைப்பை ஏற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.