மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்கான நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.
மகாத்மா காந்தியடிகளின் 151-வது பிறந்த தினத்தை
ஒட்டி, தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் அலங் கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, சென்னை சர்வோதயா சங்கத்தினர் நூற்பு வேள்வி நிகழ்த்தியதுடன், வழிபாடும் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியிலும் ஆளுநர் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.