பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வரலாற்று மிக்க சந்திப்பு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
இரு தலைவர்களின் சந்திப்பு, புகைப்படங்கள், விடியோ அனைத்தும் ஒரே இடத்தில் காண.. இங்கே கிளிக் செய்யவும்
இந்த சந்திப்பை முன்னிட்டு இரு நாட்டுத் தலைவர்களும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். முதலில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் அதிபர் ஷி ஜின்பிங்குக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமான நிலையத்திலேயே பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலாசார நடன நிகழ்ச்சிகளும், பாரம்பரிய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஒவ்வொரு கலை நிகழ்ச்சியாக நின்று பார்த்து ரசித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குப் புறப்பட்டார். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு தற்போது மாமல்லபுரம் நோக்கி சாலை மார்கமாக தனக்காக பிரத்யேகமாக சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாங்கி எல்5 ரக காரில் செல்கிறார்.
வழி நெடுகிலும் சீன அதிபருக்கு பொதுமக்கள், பாஜகவினர், மாணவ, மாணவிகளின் உற்சாக வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், கோவளத்தில் ஹோட்டலில் தங்கியிருக்கும் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க புறப்பட்டுவிட்டார்.
இரு தலைவர்களையும் அதிசயத்தில் ஆழ்த்த மாமல்லபுரம் கற்சிலைகளும்,சிற்பங்களும் அங்கு ஏற்கனவே தயாராக உள்ளன.