சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசு வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வரலாற்று மிக்க சந்திப்பு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்ற பிரதமர் மோடி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார்.
இதையடுத்து, அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் மின்னொளியில் ஜொலித்துக் கொண்டிருந்த கடற்கரை கோயிலைப் பார்த்து ரசித்தனர்.
மேலும் படிக்க: தொழில்நுட்பத்தின் உச்சம் - சீன அதிபரின் சொகுசு கார் | China President car | XI Jinping
இதன்பிறகு, கடற்கரைக் கோயிலில் இருவரும் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். இந்த கலை நிகழ்ச்சிகளில் ராமாயணக் காட்சியும் அரங்கேற்றப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்குக்கு இவை குறித்து எடுத்துரைத்தார்.
கலை நிகழ்ச்சிகளின் முடிவில், இருவரும் கலைக் குழுவினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியம் மற்றும் நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு ஆகிய இரண்டு பொருட்களை பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்குக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, இருவரும் ஒன்றாக இரவு உணவு அருந்துகின்றனர்.