பதவியை ராஜினாமா செய்தார் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி?
மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி.
மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி.
அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமாணியை மேகாலய உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும், அந்த மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தஹில் ரமாணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மேகாலயா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வதை ஏற்க மறுத்து தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார் தஹில் ரமணி.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் தரப்பிலும் மறுபரிசீலனை செய்யக் கோரி கடிதம் எழுதப்பட்டது.
அந்த கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமாணி, 3 நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலய மாநில உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான அகில இந்திய அளவிலான சீனியாரிட்டியில் தற்போது மூத்தவராக இருப்பவர் வி.கே.தஹில் ரமாணி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் முன்னரே மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்.
இத்தகைய பழைமையான நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி பொறுப்பு வகித்த அவரை மேகாலய மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியிருப்பது, அவரை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.
எனவே அவரது இடமாற்ற உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.