சென்னை: நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தேற்றும் விதமாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது.
விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
சனிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில் 1,471 கிலோ கிராம் எடை கொண்ட விக்ரம் லேண்டர் 30 கி.மீ. தொலைவில் ஒரு நொடிக்கு 1,680 மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வரை நிலைமை சரியாக இருந்தது. அதாவது, நிலவின் தரைப் பகுதியில் இருந்து வெறும் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சிறப்பாக செயல்பட்டு, திட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்ததாக பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியார்களிடம் கூறினார்.
அதன்பிறகுதான் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை தரைக்கட்டுப்பாட்டு மையம் இழந்ததாக அவர் முறைப்படி அறிவித்தார்.
அதாவது, விக்ரம் லேண்டரை தொடர்ந்து கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், விக்ரம் தரையிறங்கும் முன்பு திடீரென அது திட்டமிட்ட பாதையில் இருந்து லேசாக விலகியதை உணர்ந்தனர். அதன்பிறகுதான் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. லட்சோப லட்சம் இந்தியர்களின் 'நிலா கனவு' முடிவிற்குவந்தது. அதையடுத்து கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை, நக்கிருந்த பிரதமர் மோடி தேற்றினார்.
இருந்தபோதும் தங்கள் திட்டத்தில் 95% நிறைவேற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடு முழுவதுமிருந்து ஆறுதலும், பாராட்டும் மற்றும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தேற்றும் விதமாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
All of us are with you #ISRO. #IndiawithISRO #ProudOfISRO