'பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தை தாமாகவே முன் வந்து இன்று காலை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து விதிகளை மீறி பேனர் வைப்பது தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? விதி மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? எந்த நிகழ்ச்சி என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா? என சரமாரியாக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு பின்பற்றும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.