சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுவதாகக் கூறி இளம்பெண்ணை திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி புனித அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த தாயன்பன் (30), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அலுவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை சென்றபோது, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்குடன் (33) அறிமுகமாகினாராம்.
அப்போது கார்த்திக், சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் சாஸ்திரி தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருப்பகாக தாயன்பனிடம் கார்த்திக் கூறினாராம்.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் தனது மகளுக்கு வரன் தேடுவதாக தாயன்பனிடம் கூறினாராம். அப்போது, தாயன்பன் கார்த்திக் குறித்து செவிலியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து செவிலியர் தனது மகளுக்கும்-கார்த்திக்கும் புதன்கிழமை சென்னை கொளத்தூர் குமரன் நகரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து வைத்தாராம். இதற்காக செவிலியர் கார்த்திக்கிடம் ரூ. 10 லட்சம் வரதட்சணை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து புழல் ரெட்டேரி அருகே உள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கார்த்திக் செவிலியரிடம் மேலும் ரூ. 1 லட்சம் கேட்டாராம். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த செவிலியர், கார்த்திக்கிடம் விசாரித்ததில் அவர் மருத்துவர் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து உறவினர்கள் கார்த்திக்கை தாக்கி, மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.