நாம் 242 கோடி மரங்களையும் நட்டு நம்முடைய சத்குருவின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, சுற்றுச்சூழல் மாசு, நதிகளையும், வனங்களையும் பாதுகாத்தல், மரம் நடுதல் உள்ளிட்டவற்றின் பயனை எடுத்துரைத்துக் கூறினார். இதையடுத்து, இதற்காக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு விளக்கினார்.
இதன்பிறகு, "காவே கூக்குரல்" குறித்து பேசிய அவர்,
"காவேரி நதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், சத்குருஜி அவர்கள் “காவேரி கூக்குரல்” என்ற ஒரு இயக்கத்தை துவங்கியுள்ளது பெருமை அளிக்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற கடமைப்பட்டிருக்கின்றேன். தலைக்காவேரியில் அவருடைய பயணத்தைத் துவக்கி வைத்து, இன்றைக்கு சென்னை வந்தடைந்திருக்கின்றார். வருகின்ற வழியெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார்.
இதுவரை 69,000 விவசாயிகள் வேளாண் காடுகள் குறித்து பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் அறிந்தேன். இந்த இயக்கத்தை அடுத்து வரும் 12 வருடங்களுக்குள் இதைப் படிப்படியாக மக்களிடம் பெரிய அளவில் எடுத்துச் செல்வார்கள் என்று அறிகிறேன். இவ்வியக்கத்தின் வாயிலாக 242 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டம் தீட்டியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. இந்தியாவிலேயே அதிக மரக்கன்றுகளை நடுகின்றவர் சத்குருஜி அவர்கள் தான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக உருவாக்க அம்மா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொண்டு, சத்குருஜி அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு எங்களுடைய அரசு துணை நிற்கும் என்று சொல்லி,
242 கோடி மரங்களையும் நடுகின்றபொழுது நிச்சயமாக இயற்கை வளம் பெருகும். அந்த இயற்கை வளம் பெருகின்றபொழுது நல்ல காற்று மற்றும் ஆரோக்யமான வாழ்வு கிடைக்கும். நல்ல மழையும் கிடைக்கும். அனைத்தும் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் நாம் 242 கோடி மரங்களையும் நட்டு நம்முடைய சத்குருஜி அவர்களின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்" என்றார்.