காஷ்மீர் சிறையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் சரியான நேரத்தில் ஸ்ரீநகர் சென்று ஃபரூக் அப்துல்லாவை சந்திப்பேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தபோது, இதுகுறித்து 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
மேலும் படிக்க: ஃபரூக் அப்துல்லா எங்கே? வரும் 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,
"எனது வழக்கறிஞர் அஜ்மல் கான் சிறந்த, அசைக்க முடியாத ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். காஷ்மீர் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்கள் முதலில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும். இதுதான் முதல் இலக்கு. சரியான நேரத்தில் ஃபரூக் அப்துல்லாவை ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று நேரில் சந்திப்பேன்" என்றார்.