முகப்பு
தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணி தொடக்கம்

மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணியை ஓய்வு பெற்ற தொல்லியல்துறை உதவி இயக்குநர் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை தொடக்கினர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:10 AM
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை காகிதத்தில் அச்சு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட தொல்லியலாளர் சொ. சாந்தலிங்கம்.
பகிர்:


மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணியை ஓய்வு பெற்ற தொல்லியல்துறை உதவி இயக்குநர் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை தொடக்கினர்.
  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த கோயிலை மையமாக வைத்தே மதுரை நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 17 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு 8 கோபுரங்கள், 2 விமானங்கள் உள்ளன. கோயிலில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம் என பல்வேறு மண்டபங்களில் வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.  இந்நிலையில்,  இங்குள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணியை கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. தொல்லியல் துறை ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் சொ. சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இப் பணியை  திங்கள்கிழமை தொடக்கினர். 
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய உள்ளோம்.  கோயிலில் 800 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்து,  அது நூலாக தயாரிக்கப்பட உள்ளது. வரலாற்று ஆராய்ச்சி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கோயில் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். 
  கோயில்  கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை 3 மாதங்களில் ஆவணப்படுத்தி,  அதன் பிறகு நூலாக தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். மத்திய அரசு கணக்கெடுப்பின்படி,  இங்கு நிலக்கொடை தொடர்பாக 66 ஆவணங்கள் கல்வெட்டுகளாக உள்ளன. 13-ஆம் நூற்றாண்டுக்கு பிந்தைய  பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் தமிழில்  இடம்பெற்றுள்ளன என்றார். 
கோயில் இணை ஆணையர் நா. நடராஜன் கூறியது:  கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக இப் பணி தொடங்கியுள்ளது.  இந்த ஆவணத்தின் மூலம் ஆராய்ச்சி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.   கோயிலின் சுற்றுச்சுவர்கள், படிக்கட்டுகள், தரைப் பகுதி, தூண்கள் எனப் பல்வேறு இடங்களிலும் ஏராளமான கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. சில இடங்களில் ஒரு வரி, இரண்டு வரி, ஒரு சில எழுத்துகளில் கூட கல்வெட்டுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி அதில் உள்ள விவரங்கள் தொகுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.