ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு படை எடுத்த பொதுமக்கள்
ஆம்பூர் அருகே உள்ளது மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி. இந்த ஊரை ஒட்டி துருகம் காப்பு காடுகள் பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் எனும் கோயில் உள்ளது.
ஆம்பூர் அருகே உள்ளது மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி. இந்த ஊரை ஒட்டி துருகம் காப்பு காடுகள் பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் எனும் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டு முழுவதும் திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பக்தர்களும், பொதுமக்களும் கோவிலுக்கு வருவது வனத்துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு செல்லும் பாதையில் முள்வேலிகளை போட்டிருந்தனர். வனத்துறையினர் போட்டு இருந்த முள்வேலிகளை இரவு நேரத்தில் காட்டுக்குள் செல்லும் சமூக விரோதிகள் யாரோ அகற்றியுள்ளனர்.
இதை தெரிந்து கொண்ட ஆம்பூர் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான வண்டிகளில் இன்று காலை காட்டுக்குள் கோவில் பகுதிக்கு சென்றுள்ளனர். இப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆம்பூர் வனசரகர் மூர்த்திக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த உமராபாத் காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். ஆம்பூர் வனசரகர் மூர்த்தி தலைமையில் வந்த வனத்துறையினர் மீண்டும் காட்டுப்பாதையில் யாரும் செல்லாத வண்ணம் ஆங்காங்கே புல்வெளிகளை அமைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் " ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தவர்கள் பொழுதுபோக்கும் சுற்றுலாத் தலமாக நினைத்து வந்த வண்ணமாக உள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதால் , கொரனோ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். அதே சமயம் ஊரடங்கை தளர்த்தும் வரை யாரும் இந்த காட்டுப் பாதையில் பயணிக்காதவாறு வனத்துறையினர் முள்வேலிகளை பலப்படுத்த வேண்டும்" எனவும் கூறுகின்றனர்.