ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி ஜம்மு காஷ்மீரில் குண்டு பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, திருமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை, 173-வது படைப்பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி, த/பெ சக்திவேல் என்பவர் 25.7.2020 அன்று எதிர்பாராத விதமாக அவருடைய துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 31.7.2020 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.