சென்னை: கரோனா சிகிச்சைக்கு கட்டண மோசடி செய்த குற்றச்சாட்டின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த நோயாளிக்கு 19 நாள்கள் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை அதற்காக ரூ.12.20 லட்சத்தை கட்டணமாக வசூலித்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இது குறித்து அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு நடத்தி, சிகிச்சை முறைகளை ஆராய்ந்ததில், கட்டண மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், மாநில அரசு நிர்ணயித்த கட்டண வரைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிய வந்தது. இதனால், அந்த மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால், கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயித்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.