ஊரடங்கு உத்தரவால் சீர்காழியில் கிர்ணி பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் அழுகி வீணாகி வருவதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிர்ணி பழ சாகுபடி குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியது. இதனை சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால் கரோனா ஊரடங்கால் நன்கு விளைந்த கிர்ணி பழங்களை அறுவடை செய்ய முடியாமலும் அவ்வப்போது பெய்யும் மழையினால் பூச்சிகள் தொல்லையால் வயலில் அழுகி வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் கிர்ணி பழம் சுமார் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மூன்று மாதம் பயிராகும் இந்தப் பழம் தற்போது அறுவடைக்கு காத்திருந்த நிலையில் கரோனா அச்சத்தால் தமிழக அரசு விதித்திருந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதால் வியாபாரிகள் யாரும் கிர்ணி பழத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் நல்ல விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த பழங்கள் அனைத்தும் அழுகி வயலில் வீணாகி வருகிறது.
இதனால் தாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் செலவு செய்த தொகையை கூட திரும்ப எடுக்க முடியவில்லை என்ற மனஉளைச்சலுக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். மேலும் இதை பயிரிடுவதற்கு வங்கிகளில் அடகு வைத்திருந்த நகைகளை கூட திருப்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் தங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.