ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் நீலகிரியில் அதிகனமழை பெய்யும்
ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தீவிரமடைந்துள்ளதால் நீலகிரியில் அதிகன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தீவிரமடைந்துள்ளதால் நீலகிரியில் அதிகன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவில் அதிகனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக் கூடும்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 முதல் 4.1 மீட்டர் வரை எழும்பக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.