மின்வாரியத்தின் செயல் பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பது போன்றது: உயர்நீதிமன்றம் கருத்து
மின் பகிர்மான கழகத்தின் நடவடிக்கை பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுப்பது போன்று உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகளிடமிருந்து அதிகபட்ச கட்டணத்தை வசூலிக்கும் மின் வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நடவடிக்கை, பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுப்பது போன்றது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் தொழிற்சாலைகளின் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் வருவாய் இழந்துள்ளன. இந்த நிலையில் தொழிற்சாலைகள் 90% மின் கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தென்னிந்திய நூற்பாலைகள், காலணி தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட நிறுனங்கள் மற்றும் அவை சார்ந்த சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். கரோனா பொதுமுடக்கக் காலகட்டத்தில் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், அதிகபட்சமான மின் கட்டணத்தை செலுத்த கூறுவது சட்டவிரோதமானது. மின் வாரியத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளிவிடும் என வேதனை தெரிவித்தார். தொழிற்சாலைகளிடமிருந்து அதிகபட்ச கட்டணத்தை வசூலிக்கும் மின் வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நடவடிக்கை, பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுப்பது போன்றது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
கரோனா பொதுமுடக்கம் முடியும் வரை தொழில்சாலைகளில் பயன்படுத்தப்படும் உயர்மின் அழுத்த இணைப்புகளுக்கு 20 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். கூடுதலாக கட்டணம் வசூலித்திருந்தால் அந்த தொகையை வரும் மாதங்களின் மின் கட்டணத்தில் சரிபடுத்திக்கொள்ள வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.