பிறமாவட்டங்களுடன் போட்டியிடுவதற்காக சென்னையில் டாஸ்மாக் திறப்பா? - கனிமொழி கேள்வி
கரோனா பரவலில் மற்ற மாவட்டங்களோடு போட்டி போடுவதற்காக சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா பரவலில் பிறமாவட்டங்களுடன் போட்டியிடுவதற்கு சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படவுள்ளன. சென்னையில் தற்போது கரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்த அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி, 'பிறமாவட்ட கரோனா பரவல் எண்ணிக்கைகளோடு சென்னையை போட்டி போட வைக்கத்தான் தமிழக அரசு சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா ?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், 'சென்னை தவிர பிற மாவட்டங்களில் கரோனா பரவியதில் டாஸ்மாக்கிற்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!!' என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.