பிள்ளையார் சிலை வைத்தது ஏன்? உதயநிதி விளக்கம்
மகள் விருப்பத்தின்பேரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, அவரது விருப்பத்திற்காகவே சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்ததாக திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகள் விருப்பத்தின்பேரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, அவரது விருப்பத்திற்காகவே சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்ததாக திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது, பிள்ளையார் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் அதை திமுகவுக்கு எதிரானதாகத் திசைதிருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள், 'கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்கள்' என்று கேட்டார். அவரின் விருப்பத்தின் பேரில் நான்தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்துக்காக என் டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். அவ்வளவே." என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் தனது சுட்டுரைப் பக்கத்தில் விநாயகர் சிலை புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். உதயநிதியின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.