முகப்பு
தமிழ்நாடு

கரோனா காலத்திலும், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான்: முதல்வர்

கரோனா காலத்திலும், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

கரோனா காலத்திலும், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், கரோனா ஊரடங்கு காலத்திலும், வேளாண் தொழிலில் 100 சதவிகிதப் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, அப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலைகளில் முதற்கட்டமாக 50 சதவிகிதமும், பின்னர் 100 சதவிகிதமும் பணியாளர்களை வைத்து தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து, அவைகளும் இயங்கி வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெரும்பாலும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
கரோனா காலத்திலும், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல, இந்திய அளவில் ஜிடிபி 4% உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஜிடிபி 8% ஆக உள்ளது. எவ்விதத்திலும் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை இங்கு கிடையாது. வெளிமாநிலங்களிலிருந்து சுமார் 7.50 இலட்சம் நபர்கள் தமிழ்நாட்டில் தங்கிப் பணிபுரிந்து வந்தார்கள். அந்தளவிற்கு தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்புகளும், தொழிற்சாலை சார்ந்த பணிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. இப்பணிகளுக்கு நம் மாநிலத் தொழிலாளர்கள் மட்டுமன்றி வெளிமாநிலத் தொழிலாளர்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கரோனா வைரஸ் காரணமாக சுமார் 4.50 இலட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தவுடன், அரசாங்கம் அதற்கான முழுச் செலவையும் ஏற்று அவர்களை அனுப்பி வைத்தது. தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு வழங்கப்பட்டன, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. நம் மாநிலத் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகள் அனைத்தையும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் செய்தோம்.
அம்மா 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 2.42 இலட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார்கள். அதேபோல,
அம்மாவின் அரசும் 2019-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, சுமார் ரூபாய் 3 இலட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, தற்பொழுது அந்தத் தொழில் நிறுவனங்கள் படிப்படியாக தொழில் தொடங்க ஆரம்பித்துவிட்டனர். ஆகவே, தமிழகத்தில் அதிகளவில் தொழில் தொடங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.