சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணியாமல் வந்தால் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பெளர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு நாளை முதல் நிபந்தனைகளுடன் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், திருப்பி அனுப்பப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.