உயர்நீதிமன்றத்தில் 10 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு : நீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு
சென்னை உயர்நீதிமன்றத்தின் 10 புதிய நீதிபதிகள் வியாழக்கிழமை (டிச.3) பதவியேற்றுக் கொண்டனர். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 10 புதிய நீதிபதிகள் வியாழக்கிழமை (டிச.3) பதவியேற்றுக் கொண்டனர். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 10 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், எஸ்.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதீஷ்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை ஏற்றுக் கொண்டு. குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 10 மாவட்ட நீதிபதிகளையும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
Advertisement
இதன்படி 10 புதிய நீதிபதிகளுக்கும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்றுக் கொண்ட 10 புதிய நீதிபதிகளில், நீதிபதிகள் கே.முரளிசங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் கணவன், மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்த இந்த விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு யுடியூப் மூலமாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.