வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் அமைப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேலம் ஏகம் பவுண்டேசன் மற்றும் கலாம் நண்பர்கள் குழு சார்பில், மூலிகைச் செடிகளும், மரக்கன்றுகளும் நட்டு மூலிகைத் தோட்டம் புதுப்பிக்கப்பட்டது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேலம் ஏகம் பவுண்டேசன் மற்றும் கலாம் நண்பர்கள் குழு சார்பில், மூலிகைச் செடிகளும், மரக்கன்றுகளும் நட்டு ஞாயிற்றுக்கிழமை மூலிகைத் தோட்டம் புதுப்பிக்கப்பட்டது.
சேலம் ஏகம் பவுண்டேஷன் மற்றும் கலாம் நண்பர்கள் குழு சார்பில், சேலம் மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவுகளில், மூலிகைத் தோட்டங்களும், அரசுப்பள்ளி சத்துணவு மையங்களில் இயற்கை காய்கறித் தோட்டங்களும் இலவசமாக அமைத்துக் கொடுத்து வருகின்றனர்.
வாழப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவப் பிரிவு மூலிகை தோட்டத்தில், ஏகம் பவுண்டேஷன், கலாம் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை கவாத்து மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். 27 வகையான மூலிகைச் செடிகளை நட்டு, பசுமை வலை அமைத்து சித்த மருத்துவ மூலிகை தோட்டத்தை புதுப்பித்தனர். கழிவுகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த நெகிழித் தொட்டிகளை இலவசமாக வழங்கினர்.
மூலிகைத் தோட்டத்தை புதுப்பித்துக் கொடுத்த, சேலம் ஏகம் பவுண்டேஷன் மற்றும் கலாம் நண்பர்கள் குழுவிற்கு, சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.