தேக்கடி ஏரியில் பலத்த மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேக்கடி ஏரியில் பலத்த மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கம்பம்: தேக்கடி ஏரியில் பலத்த மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு மற்றும் தேக்கடி ஏரிப் பகுதியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக திங்கள்கிழமை இரவு பெரியாற்றில் 2.4 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 25.6 மில்லி மீட்டர் என பலத்த மழையும் பெய்தது இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
திங்கள்கிழமை அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 2,103 கன அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அணைக்கு வினாடிக்கு 2,771 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சிறிது உயர்ந்தது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,125.20 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 3,661 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,771 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1,400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
மின் உற்பத்தி
முல்லைப்பரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திங்கள்கிழமை வினாடிக்கு 1,290 கன அடி தண்ணீர் வந்தது, செவ்வாய்க்கிழமை 1,400 கன அடியாக அதிகரித்தது. இதனால் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மூன்று மின்னாக்கிகள் மூலம், தலா 42 மெகாவாட் என மொத்தம், 126 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.