முகப்பு
தமிழ்நாடு

குன்னூரில் மலை ரயிலை மறிக்க முயன்ற விசிகவினர் கைது

நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூரில் மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
குன்னூரில் மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
பகிர்:

பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூரில் மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். விரைவில் தெற்கு ரயில்வே சார்பில் மலை  ரயிலை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயிலுக்கு பாரம்பரிய சின்னம் என்று யுனெஸ்கோவின் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மலை ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் TN43 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மலை ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வாரத்தில் சனி, ஞாயிறு நாள்களில் மட்டும் இயக்க திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனத்தினரால் கடந்த 5 மற்றும் 6-ம் தேதி இரண்டு நாள்கள் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது. அதில் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல பயணக் கட்டணமாக  நபர் ஒன்றுக்கு ரூ. 3,000 வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தை எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை உயர்த்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே நிர்வாகம் உதகை வரை பயணக் கட்டணமாக 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும் குறைவாக பெற்று வந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் கட்டணக் கொள்ளை அனைவரிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர மலை ரயிலின் பாரம்பரிய சின்னத்தை மறைத்து TN 43 என்று பெயர்ப் பலகையுடன் கடந்த வாரம் இயக்கப்பட்டது. இன்று வந்த இந்த ரயிலில் பெயர்ப் பலகை மட்டும் அகற்றப்பட்டு அதே கட்டணத்தில் இயக்கப்பட்டது.

இதையடுத்து மலை ரயிலை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து சுற்றுலாப் பயணிகளுடன் ஞாயிற்றுக் கிழமை உதகை வந்த மலை ரயிலை குன்னூரில் மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும் விரைவில் தெற்கு ரெயில்வே சார்பில் மேட்டுப்பாளையம் உதகையிடையே மலை ரயிலை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →