கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் அரிய வகை கழுகு
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ‘இமாலயன் கிரிபான்’ என அழைக்கப்படும் இமயமலை பகுதியில் காணப்படும் அரிய இன கழுகு இருப்பது தெரியவந்துள்ளது.
நாகை மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ‘இமாலயன் கிரிபான்’ என அழைக்கப்படும் இமயமலை பகுதியில் காணப்படும் அரிய இன கழுகு இருப்பது தெரியவந்துள்ளது.
கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதியையொட்டிய கடற்கரையில் கடந்த சில நாள்களாக புதிய இனப் பறவை தென்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, மீனவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனச் சரக அலுவலா்அயூப்கான் தலைமையிலான வனத்துறையினா், அந்த பறவை குறித்து விவரங்கள் சேகரித்தபோது, இது இமாலயன் கிரிபான் என அழைக்கப்படும் கழுகு இனத்தைச் சோ்ந்தது, இவை இமயமலை பகுதியில் அதிகமாக காணப்படுகிறது என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து, மும்பை இயற்கை வரலாற்றுக் கழக இணை இயக்குநா், பறவையியல் விஞ்ஞானியான டாக்டா் பாலசந்திரன் கூறியது:
இமாலயன் கிரிபான் என அழைக்கப்படும் கழுகு இனத்தின் குஞ்சு பருவமுடைய பறவை இது. இறந்த விலங்கினத்தின் மாமிசத்தை உண்டு வாழும் கழுகு இனத்தைச் சோ்ந்த இது, இமயமலை பகுதியில் இருந்து வந்திருக்கலாம். வெகு தொலைவில் இருந்து வந்திருந்தாலும் அது ஆரோக்கியத்துடன் உள்ளது. இதற்கு முன்பு 1981-இல் நாகை - வேளாங்கண்ணி இடையே ஒரு முறை ஒரு கழுகு காணப்பட்டது. அதற்கு பிறகு தற்போதுதான் இந்த பகுதிக்கு இந்த இன கழுகு வந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து சரணாலயப் பகுதிக்கு பல வகையான பறவைகள் வலசை வந்து செல்லும் நிலையில், புதிய வரவாக இமாலயன் கிரிபான் இன கழுகு காணப்படுவது இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.