பிளாஸ்டிக் மீதான தடையால் பாதித்த நிறுவனங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க ஏற்பாடு
நெகிழிப் பொருள்கள் மீதான தடையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெகிழிப் பொருள்கள் மீதான தடையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் மண்வளம் பாதுகாக்க ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்பட்டு தற்போது வரையில் அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்களான காகித கப், நெகிழிப் பைகள், நெய்யப்படாத பைகள், நெகிழித் தட்டுக்கள், அதிக அடர்வு கொண்ட நெகிழிப் பைகள், தேநீர் கோப்பைகள் உள்ளிட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. அதனால் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால், அந்த நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள வங்கிக் கடன் தொகையில் 50 சதவீதமும், அதிகபட்சமாக ஒரு நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் வரை (ஏற்கெனவே வழங்கப்பட்ட முதலீட்டு மானியத்துடன் சேர்த்து) பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, நெகிழிப் பொருள்களின் மீதான தடையின் விளைவாக பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடுத்தாண்டு மே 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காக்களூர், சிட்கோ தொழில்பேட்டை, அஞ்சல் நிலையம் அருகில் திருவள்ளூர் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.