வேளாளர் ஜாதிப் பெயரை மற்ற ஜாதியினருக்கு வழங்க பரிந்துரை செய்தததை திரும்பப் பெறக் கோரிக்கை
வேளாளர் ஜாதிப் பெயரை மற்ற ஜாதியினருக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தததை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி மயிலாடுதுறை அனைத்து வேளாளர் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை: வேளாளர் ஜாதிப் பெயரை மற்ற ஜாதியினருக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தததை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி மயிலாடுதுறை அனைத்து வேளாளர் கூட்டமைப்பினர் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் இரா.லலிதாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து வேளாளர் சமுதாயத்தினர் வெள்ளிக்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த கண்டன பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, அனைத்து வேளாளர் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவரும், சைவ வேளாளர் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான பண்ணை டி.சொக்கலிங்கம் தலைமையில் கார்காத்த வேளாளர் சங்க நகரத் தலைவர் லட்சுமி நாராயணன், சோழிய வேளாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு வேளாளர் சங்க பிரதிநிதிகள் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் இரா.லலிதாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியது:
இரண்டு கோடி மக்கள் தொகையைக் கொண்ட வேளாளர் ஜாதி மக்கள் மனவேதனை அடையும் வகையில், பிற இனத்தவரை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேவேந்திரகுல வேளாளர் என்பதற்கு பதிலாக தேவேந்திரகுலம் என அறிவிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. வேளாளர் என்று உரிமைகோர எந்தவிதமான சான்றாவணங்களும் ஆதாரப் பூர்வமாக வைக்கப்படவில்லை. எந்தவித அரசு சலுகைகளும் பெற முடியாத இந்த இனத்தின் பெயரை மட்டுமாவது அரசு எங்களுக்கு காப்பாற்றித்தர வேண்டும்.
எனவே, வெள்ளாளர்/வேளாளர் ஜாதிப் பெயரை பிற ஜாதியினருக்கு வழங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தததை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்து, அரசின் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சைவ வேளாளர் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பண்ணை டி.சொக்கலிங்கம், வேளாளர் என்ற சொல்லை தேவேந்திரகுல வேளாளருக்கு அறிவிப்பதாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள தமிழக அரசைக் கண்டித்தும், அந்த பரிந்துரையை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட சிறப்பு அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கே வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்போம் என்றார்.
இதில், சைவ வேளாளர் சங்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராம், கல்யாணசுந்தரம், சிங்காரவேலன், சுந்தரேசன், கார்காத்த வேளாளர் சங்கம் சார்பில் நகர பொறுப்பாளர்கள் கே.குமார், சுவாமிநாதன், சோழிய வேளாளர் சங்கம் சார்பில் மைதீன் சுவாமிநாதன், எஸ்.வாஞ்சிநாதன், திருவாரூர் அண்ணாமலை, ஓவியம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.