கட்டுமானப் பணியில் மேம்பாலம்: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் மக்கள்
ஊத்துக்கோட்டையில் கட்டுமானப் பணிகள் முடிவடையாத மேம்பாலத்தில் தற்காலிகப் படிகள் மூலமாக ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
ஊத்துக்கோட்டையில் கட்டுமானப் பணிகள் முடிவடையாத மேம்பாலத்தில் தற்காலிகப் படிகள் மூலமாக ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் ஆரணியாற்றை கடந்த 20 நாள்களாக பொதுமக்கள் தற்காலிகப் படிகள் மூலமாக ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக ஆந்திரத்தில் பெய்த கனமழையால் பிச்சாட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் ஆரணியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 25 கி.மீட்டரில் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் செல்வதற்கு பதிலாக 40 கி.மீ. சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் ஊத்துக்கோட்டையின் அருகே உள்ள போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 40 கி.மீ. சுற்றி வர முடியாததால் கட்டுமானப் பணிகள் முடிவடையாத மேம்பாலம் மீது ஆபத்தான முறையில் ஏறி இறங்கிச் சென்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மேம்பாலத்தில் சென்று வரும் வகையில் தற்காலிக படிகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் தற்காலிக இரும்புப் படிகள் வழியே மேம்பாலத்தில் ஏறி ஆற்றை கடந்து செல்கின்றனர். ஒரு வாரத்தில் தரைப் பாலத்தை சீரமைத்து தருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். எனினும் கடந்த 20 நாள்களாக பொதுமக்கள் வேறு வழியில்லாததால் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தின் வழியே ஆபத்தான முறையிலே ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
அவசரத்திற்கு ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்துள்ளதால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைத்து போக்குவரத்து மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.