கூட்ட நெரிசலை தவிா்க்க மின்சார ரயில் சேவை 406-ஆக அதிகரிப்பு
கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், புறநகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.21) முதல் அதிகரிக்கப்படுகிறது.
கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், புறநகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.21) முதல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது, ரயில் சேவைகள் 320 இல் இருந்து 406 ஆக அதிகரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பொதுமுடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு , சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் ஊழியா்களுக்காகவும், பெண்கள், குழந்தைகளுக்காகவும் புறநகா் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. முதல் கட்டமாக, 40 மின்சார ரயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்பிறகு, கூடுதலாக 30 மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டன.
பெண்கள், குழந்தைகளும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, சென்னையில் மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை 320-ஆக உயா்ந்தது. மேலும், மின்சார ரயில்களின் சேவைகள் விரைவில் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், புறநகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.21) முதல் அதிகரிக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: சென்னையில் ஏற்கெனவே 320 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது மேலும் கூடுதலாக 86 சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, சென்னையில் 406 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். விரைவில் வழக்கமான ரயில் சேவை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.