முகப்பு
தமிழ்நாடு

காரமடை ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

மேட்டுப்பாளையம் அருகே காரமடை  ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

Updated On : 25 டிசம்பர், 2020 at 8:47 AM
காரமடை  ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்,வெண் பட்டுடுத்தி,சேஷ வாகனத்தில் அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:42 PM

மேட்டுப்பாளையம் அருகே காரமடை  ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்,வெண் பட்டுடுத்தி, சேஷ வாகனத்தில் அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்று காரமடை  ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோயில்.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி, பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். உற்சவங்களின் போது மூலவரான அரங்கநாதசுவாமி சொர்க்கவாசல் வழியாக வந்து  நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை வந்தடைவார்.
 
இந்த நிலையில் இந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.அதன் ஒருபகுதியாக முகக்கவசம் அணிந்து,போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து கோயில்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காரமடை ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சரியாக அதிகாலை 5.45 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அரங்கநாதர் வெண் பட்டுடுத்தி சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Advertisement

அப்போது, பக்தர்களின் கோவிந்தா,கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. முன்னதாக ஸ்ரீதிருமங்கையாழ்வார், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர் உள்ளிட்ட ஆழ்வார்கள் கோவில் உள்பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாசல் எதிரே வந்த பின்னரே சொர்க்க வாசல் திறக்கப்பட்டு எம்பெருமான் ஆழ்வார்களுக்கு முதலில் காட்சியளித்தார். 

எனினும்,கரோனா பரவல் காரணமாக ஸ்ரீஅரங்கநாத சுவாமி நான்கு மாட வீதிகளின் வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எம்பெருமான் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் மட்டுமே உலா வந்தார்.

கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினரால் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணிக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, செயல் அலுவலர் ( கூடுதல் பொறுப்பு ) கைலாஷ மூர்த்தி,ஸ்தலத்தார்,மிராசுதாரர்கள் தாசபளஞ்சிக சங்க தலைவர் வி.பி.வி.கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காவல் துறை தரப்பில் ஐ.ஜி.பெரியய்யா தலைமையில் டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், எஸ்.பி.அருளரசு, ஏ.டி.எஸ்.பி. விஜய கார்த்திக், டி.எஸ்.பிக்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் குமார், ஆரோக்கியசாமி, அன்னூர் இன்ஸ்பெக்டர்  வெங்கடேஷ் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.