பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கரோனா
பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதில் பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கான கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,009 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,14,170 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் 1,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,93,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய அறிவிப்பில் மேலும் 10 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,069 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 8,947 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் பிரிட்டனிலிருந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 நண்பகல் வரை ஏறத்தாழ 2,300 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். அதில் 1,437 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1,224 பயணிகளுக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 201 பயணிகளின் பரிசோதனை முடிவு வரவில்லை. மீதமுள்ள பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இன்றைய நிலவரப்படி பிரிட்டனிலிருந்து வந்து கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்டவாரியாக:
சென்னை -5
தஞ்சாவூர் - 3
நீலகிரி - 2
தேனி - 1
மதுரை - 1
செங்கல்பட்டு - 1
பிரிட்டனிலிருந்து கரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேருடன் தொடர்பிலிருந்த 93 பேரில் 12 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 5 பேரின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
பிரிட்டனிலிருந்து திரும்பி கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.