தஞ்சையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருமங்கலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர்களை திருமங்கலம் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திருமங்கலம் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை திருமங்கலத்திலிருந்து வேனில் புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் காவலர்கள் வேனை கப்பலூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். இதனால் காவலர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வேனில் வந்தவர்கள் கப்பலூர் சுங்கச்சாவடியில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மதுரை திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்படையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து திருமங்கலம் நகர் காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.