பொறியியல் முதல் மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டன.
முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இணைய வழியிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே அவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வு குறித்த அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பொறியியல் முழு நேர படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்களை பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்களுக்கான செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும். மார்ச் 8-ஆம் தேதி முதல் எழுத்துத் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 3-ஆம் தேதிக்குள் பாடங்களை முடிக்க வேண்டும். மார்ச் 5 முதல் 15-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் 5-ஆம் தேதி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.