கரோனா வைரஸை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது பாஜக அரசு: கே.பாலகிருஷ்ணன் பேட்டி
இந்தியாவில் பாஜக அரசு, கரோனா வைரஸை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாஜக அரசு, கரோனா வைரஸை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சீனாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பாஜக அரசு, கரோனா வைரஸை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைக்கிறது.
பட்ஜெட்டில் உள்ள மோசமான அறிவிப்புகளைக் கண்டித்து வருகிற 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்' என்றார்.
மேலும், நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது குறித்து, 'படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று விஜயிடம் விசாரணை மேற்கொள்ளும் அளவுக்கு அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல. பல படங்களில் அவர் பாஜக அரசை விமர்சித்த காரணத்திற்காக இந்த வருமான வரித்துறை சோதனை இருக்கலாம்' என்றார்.
தொடர்ந்து, சிறுவனை செருப்பு கழட்ட வைத்ததற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து மதவெறி கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அவர் அதிமுக அமைச்சரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைச்சரா? என்று தெரியவில்லை. அவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பேசினார்.
மேலும், தமிழகத்தில் தேர்வு வாரியத்தில் ஊழல்கள் பெருகியுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 700 கோடிக்கு மேல் ஊழல் நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.