சடலத்தை அடக்கம் செய்யச் சென்றபோது ஏற்பட்ட தகராறு காரணமாக குத்தாலம் அருகே பாட்டிலால் குத்தப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் குத்தாலம் பாலையூர் சரகம் சின்னகொக்கூரில் விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளார். அவரின் சடலத்தை அடக்கம் செய்யச் சென்றபோது பூக்களை வீசுவதிலும், மாலை போடுவதிலும் சின்ன கொக்கூர் தெருவில் வசிக்கும் சரவணன் (வயது 24) என்பவருக்கும், மாதவன், ரஞ்சித் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சமாதானம் செய்து பிரேதம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இரவில் சரவணன் தனது தாய்மாமன் முருகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது அதே ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் செந்தில்குமார் (30), ராமச்சந்திரன் (25) மற்றும் ஆடுதுறை ரயில்வேகேட் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் மாதவன் (32) , ரஞ்சித் (31) ஆகியோர் குடிபோதையில் சரவணனின் தொண்டை மற்றும் மார்பில் பாட்டிலால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சரவணனை சிகிச்சைக்காக குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.