தஞ்சாவூர் ஆட்சியர் முன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியர் முன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியர் முன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் ஆட்சியரை அலுவலகக் கூட்டத்தில் ஆட்சியர் ம.கோவிந்த ராவிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக நூற்றுக்கும் அதிகமான மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்சியர், மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டையைச் சேர்ந்த எம்.விவேகானந்தன்(50) தனது பையிலிருந்த பாட்டிலை எடுத்து தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். இதைப்பார்த்த போலீஸார் பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து அவரைப் பிடித்தனர்.
மாட்டுப் பண்ணை வைப்பதற்காக வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் உதவி கேட்டதாகவும், வங்கி அலுவலர்கள் தர மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் விவேகானந்தன் தெரிவித்தார்.
இதையடுத்து விவேகானந்தனை தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.