திருப்பூரில் பாஜக பேரணி நடைபெறவுள்ள நிலையில் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு பிரியாணி கடை உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகவும் பாஜகவினர் பேரணி மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னரில் வெள்ளிக்கிழமை குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவுப் போராட்டம் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் நடைபெறும் இந்த பேரணியில், பிரியாணி கடைகளுக்கும், பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2016ம் ஆனது கோவையில் இந்து முன்னணி நிர்வாகியின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, பிரியாணி கடை உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
முதல்முறையாக திருப்பூரில் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.