பெரியார் குறித்து பேசிய ரஜினிகாந்த் அதற்குரிய விலையை கொடுப்பார் - கி. வீரமணி
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தூத்துக்குடி: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பயணம் தொடக்க நிகழ்ச்சிக்காக திராவிடர் இயக்க தலைவர் கி. வீரமணி விமானம் மூலம் தூத்துக்குடி வந்திருந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு நீட்தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். நீட்தேர்வினால் 7 பேருக்கும் மேல் தற்கொலை செய்துள்ளனர். இதில் பல ஊழல்கள் நடந்திருக்கின்றன.
Advertisement
ஆள்மாறாட்டங்கள் நடந்திருக்கின்றன. நீட் தேர்வு விலக்குக்கு 2 முறை சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. எல்லா விஷயத்திலும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு தலையாட்டி கொண்டிருக்கும் தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
தற்பொழுது 5, 8, 9 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் கொண்டு வரமுயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் மீண்டும் குலக்கல்வி முறையை அமல்படுத்த முயற்சிக்கிறது.
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேரின் கதி என்ன? என கேள்வி கேட்டதற்கு எந்த 7 பேர் என பதில் அளித்த மிகப்பெரிய அரசியல் ஞானி. எனவே அவர் முழு நேர அரசியலுக்கு வந்தால் அவருடைய பேச்சும், அறிவும் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒன்றே போதும் என பதிலளித்தார்.