சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்ததால் மலை கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வீரபத்ரா. இவரது தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வரும் வீரபத்ரா புதன்கிழமை மாலை வழக்கம் போல் தனது தோட்டத்து வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டித்து வைத்துள்ளார்.
வியாழக்கிழமை காலை வீரபத்ரா வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பசுமாட்டின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து கால்நடைகளை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடி வருவதால் மலைகிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.