ஈரோடு மாவட்டத்திற்கு இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் கொவைட் சான்றிதழ் இணைப்பு கட்டாயம்
ஈரோடு மாவட்டத்திற்கு வர இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் கொவைட் சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு வர இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் கொவைட் சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு எடுக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. ஒருவர் திருமணத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது அத்துடன் திருமண அழைப்பிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும்.அதைப்போல் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் இறப்பு சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும். இதுபோன்ற மருத்துவ அவசரம் என்றால் மருத்துவர் கைப்பட எழுதிய கடிதத்தை இணைத்து அனுப்ப வேண்டும்.
இந்த மூன்று காரணங்களுக்காக மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்ததில் முறையாக சான்றிதழ் வைத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக மண்டலத்திற்குள் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. அடுத்து அங்கிருந்து ஏராளமான மக்கள் ஈரோடுக்கு வந்தனர். இதன் மூலம் வைரஸ் பரவ தொடங்கியது. இதைப் போன்று சென்னையிலிருந்து வந்தவர்கள் மூலமாகவும் வைரஸ் பரவ தொடங்கியது. இதையடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த முறை கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் அதாவது பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடுக்கு வர நினைத்தால் அவர்கள் இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது கட்டாயமாக கோவிட் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
உதாரணமாக கோயம்புத்தூரில் இருந்து ஒரு நபர் ஈரோடுக்கு வரை இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது அந்த நபர் கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு தனக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழை இணைக்க வேண்டும். இவ்வாறு இணைத்தால் தான் அந்த நபருக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது,
கரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளி நாடுகளில் இருந்தோ வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் முறையாக பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் வருபவர்கள் அவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை செய்வதில்லை. இதன்மூலம் நோய் பரப்பும் அபாயம் ஏற்படும் இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பப் படிவத்துடன் கொவைட் சான்றிதழ் இணைக்க வேண்டும் என்றனர்.