காளையார்கோவில் அருகே கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மனைவி, தாய் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், முடுக்கூரணி கிராமத்தில், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் ஸ்டீபன் என்பவரின் மனைவி சினேகா மற்றும் தாய் ராஜகுமாரி ஆகியோர் 14.7.2020 அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சினேகா மற்றும் ராஜகுமாரி ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து சிறப்பினமாக தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.