தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரை வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அணைக்கரை முத்து(65). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்ததாக வந்தத் தகவலையடுத்து கடையம் வனத்துறையினர் நேற்று இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனராம். இந்நிலையில் அணைக்கரை முத்துவிற்கு நெஞ்சுவலி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அணைக்கரை முத்து உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன் திரண்டனர். மேலும் வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்புடையவர்கள் நேரில் வர வேண்டும் அது வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.